Sunday, October 3, 2010

காம்ரேடுகளுடன் நடத்தல் - அருந்ததி ராய்

காட்டில் கட்டவிழ்ந்து கொண்டிருக்கும் போர், இந்தியா பெருமையும் வெட்கமும் ஒருங்கே அடையும் போர். "ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட்" அறிவிக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் உள்ளது. இந்தியாவின் உள்துறை அமைச்சர், ப.சிதம்பரம் ( போரின் சி.ஈ.ஒ.), அப்படியொன்று இல்லையென்றும் ஊடகங்களின் பரப்புரைதான் என்றும் சொல்கிறார். ஆனாலும் குறிப்பிடத்தக்க நிதி ஒதுக்கப்பட்டும் துருப்புகள் களமிறக்கப்பட்டும் உள்ளனர். அரங்கம் மத்திய இந்தியாவின் காடுகளில் இருந்தாலும் நம் எல்லோருக்கும் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒரு பக்கம் பணம், ஆயுதங்கள், ஊடகங்கள் மற்றும் வளரும் வல்லரசின் ஆதரவுள்ள பெரும் துணை ராணுவம். மற்றாரு பக்கம் அருமையாகக் கட்டமைக்கப்பட்ட, அசாதாரணமான, ஆயுதப்போராட்ட வன்முறை வரலாறு கொண்ட, பெரும் ஊக்கத்தோடு செயல்படும் மாவோயிஸ்ட் கெரில்லாக்களின் ஆதரவுடன் நிற்கும் மரபான ஆயுதங்கள் தரித்த கிராமத்தவர்கள். ஒவ்வொரு தடவையும் மாவோயிஸ்டுகள் (அல்லது அவர்களது முந்தைய அவதாரங்கள்) தோற்க்கடிக்கப்பட்டது மட்டுமல்லாது முற்றிலும் ஒடுக்கப்பட்டதுபோல் காணப்பட்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் முன்பை விட அதிக ஒருங்கிணைப்புடனும் அதிக உறுதியுடனும் அதிக ஆளுமையுடனும் உயிர்த்து எழுந்துள்ளனர். லட்சக்கணக்கான பூர்வகுடி மக்களின் தாயகமான, கார்ப்பரேட் உலகின் கனவுலகமான சட்டிஸ்கர், ஜார்க்கன்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தாது வளமிக்க காடுகளில் இன்று மீண்டும் அந்த எழுச்சி பரவுகிறது. இந்திய சனநாயகத்தின் ஒழுக்க அடிச்சரடான இந்திய அரசியலமைப்புச்சட்டம் 1950 இல் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. பூர்வகுடி மக்களுக்கு அது ஒரு துயரமான நாள். காலனியக் கொள்கைகளைப் பின்பற்றிய அரசியலமைப்புச் சட்டம், பூர்வகுடிகளின் தாயகத்திற்கு அரசைப் பொறுப்பாக்கியது. இது, ஒரே இரவில் மொத்த பூர்வகுடிமக்களையும் அவர்களது சொந்த மண்ணிலேயே நிலவுரிமை அற்றவர்களாக்கியது. கடந்த ஐந்தாண்டுகளில் இரும்பாலைகள், இரும்புத்தொழிற்ச்சாலைகள், மின்சார நிலையங்கள், அலுமினியச் சுத்திகரிப்பு நிலையங்கள், அணைகள் மற்றும் சுரங்கங்கள் அமைப்பதற்காக, பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, மிக ரகசியமாக, சட்டீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கன்ட் மாநில அரசுகள் தனியார் நிறுவனங்களுடன் கைச்சாத்திட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பணமாக உருமாற பூர்வகுடிகள் அகற்றப்பட வேண்டும். அதனாலேயே இந்தப் போர்.


மாவோயிஸ்ட் இயக்கத்தின் 'தலையை எடுப்பதற்காக' இந்தியப் போலீஸ் உயரதிகாரிகளுக்கு 'குறி வைத்துப் படுகொலை செய்யும்' தொழில்நுட்பத்தை இஸ்ரேலின் மொசாத் கற்றுக்கொடுப்பதாக ஒரு இணையக் கட்டுரை சொல்கிறது. இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட புதிய தளவாடங்களைப்பற்றி பத்திரிகைகளில் பேச்சடிபடுகிறது - லேசர் ரேஞ் பைண்டர்ஸ், தெர்மல் இமேஜிங் எக்விப்மென்ட் (இருட்டில் உருவங்களைக் கண்டறியும் கருவி), மற்றும் அமெரிக்க ராணுவத்தின் பிரபலமான ஆளில்லா விமானங்கள் போன்றவை. ஏழைகளுக்கு எதிராகப் பிரயோகிக்கச் சிறந்த ஆயுதங்கள்.

Saturday, July 25, 2009

snafu


2008 இல் எனது நிறுவனச் செலவுகள் மாதம் இரண்டு லட்சத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது பங்கு வணிகப் பரிவர்த்தனைகள் சுத்தமாகக் குறைந்தது. கமாடிட்டீஸ் (பண்டகச் சந்தை) ஓரளவு கைகொடுத்தது.மார்கெடிங் மேனேஜர்களை இறுக்கிப்பிடித்தும் பயனில்லை. வருட இறுதியில் செலவுகளைக் குறைக்க பயனில்லாப் பணியாளர்களை அனுப்ப வேண்டிய கட்டாயம். மொத்த செலவில் தோராயமாக ஐம்பது சதவிகிதம் சம்பளமே. 2009 ஆரம்பத்தில் சுத்தமாய் மெலிந்து இருந்தது கம்பெனி. க்ளையெண்டுகள் ஓரளவு தக்கவைக்கப்பட்ட நிலையில் 2008 வணிகத்தைச் செய்தாலே லாபம்தான். தற்போதைய கட்டமைப்பிலேயே அதைச் செய்யவும் முடியும். இருக்கிறவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
இதே காலகட்டத்தில் பங்குச் சந்தை நன்கு மேலேறியுள்ளது (2007 இறுதியில் முதலீடு செய்தவர்கள் பொறுமை). டோ ஜோன்ஸ் மற்றும் பல இண்டக்ஸகளும் முன்னேறியிருக்கின்றன. இதற்கு காரணமாக பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் காட்டும் எதிர்பாராத லாபம். ரிசஷன் என்று சொல்லிக்கிட்டு எப்பிடி லாபம் கொழிக்குது? இந்த நிறுவனங்களின் எதிர்பாராத (?!) லாபத்துக்குக் காரணம் அவை கடந்த வருடம் செய்த ஆட்குறைப்பும் செலவுக்கட்டுப்பாடும் தான். படத்தைப் பாருங்கள்.
ரிசஷன் ஆரம்பித்த 2007 டிசம்பரிலிருந்து 65 லட்சம் வேலைகள் காலி. முந்தைய ரிசசன்களுக்குப் பிந்திய காலத்தில் நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதை தள்ளிப் போடவே செய்தன. இருப்பவர்களை வைத்து வேலை வாங்கின. இப்போது பொருளாதாரம் திரும்புவது போல் தோன்றினாலும் வேலையிழந்தோர் எண்ணிக்கை முன்பை விட அதிகம். ஆட்குறைப்பு மிகத் துரிதமாக நடந்தது. தேவையும் உற்பத்தியும் பரவாயில்லை என்கிற செய்திகள் வந்தாலும் உண்மையில் அதிகரிக்கும் வேலையிழப்பு இந்த ரிசசனை முந்தையவற்றிலிருந்து ஆழமானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது.
SNAFU = situation normal all fucked up

Michael Jackson

மைக்கேல் ஜாக்சன்

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது பாடத்தைத் தவிர பிற விசயங்களில் அக்கறை காட்டுவது எனக்கோ ஜெயகார்த்திக்கோ மற்ற பசங்களைப்போல குழப்பத்தை ஏற்ப்படுத்தவில்லை. கார்த்தியை எனக்குப் பழக்கமான ஆறாம் வகுப்பிலிருந்து நாங்கள் அப்படியே. அதுவே நாங்கள் மட்டுமே விவாதிக்கக் கூடிய ஒரு தளத்தை ஏற்படுத்தியது. புத்தகங்கள், இசை, சினிமா. புத்தகங்கள் ஆனந்த விகடன், இந்தியா டுடே, நாவல்கள் போன்றவை. இசை திரையிசை. மேற்சொன்ன இரண்டும் எனக்குக்கு கிடைத்தது கார்த்தியின் வீட்டில். பிறகு ஆங்கிலப் படங்கள். ஏழாம் வகுப்பு படிக்கும்போது நாங்கள் வார இறுதியில் மாப்பிள்ளை வினாயகரில் ஸ்பீல்பெர்கின் இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி லாஸ்ட் க்ரூசேட், அர்னால்டின் கமாண்டோ, போன்ற பல படங்களைப் பார்த்தோம். இதில் இசையும் புத்தகங்களும் கார்த்தியின் அண்ணன் வாங்கிபோடுவது. கார்த்தியின் அண்ணன் அலாதியான ரசனை கொண்டவர்.

ஒரு நாள் கார்த்தி வீட்டில் வித்தியாசமான பிளாஸ்டிக் கவரோடு ஒரு கேசட் இருந்தது. அப்போது கேசட் கவர் வேறு மாதிரி இருக்கும். கவரே வித்தியாசமாய் ஈர்த்தது. பிரதானமாய் இரு கண்கள். திருத்தமாய் மையிட்டது போல. சுற்றிலும் ஆபரண நுணுக்கத்தோடு பல சித்திரங்கள். பார்த்துக்கிட்டேயிருக்கலாம். அதில் 'மைக்கேல் ஜாக்சன்', 'டேஞ்சரஸ்' என்று இருந்தது. உள்ளே ஒரு சிறு புத்தகம். புத்தகம் கூட இல்லை.நீண்ட தாள் மடித்து வைக்கப்பட்டிருந்தது. பாடல் வரிகள். கார்த்தி வீட்டில் அப்போது அருமையான நேஷனல் பேனசோனிக் ஸ்டீரியோ ப்ளேயர் இருந்தது. முதல் பாடல் ஆரம்பிக்கையில் கண்ணாடிப் பாத்திரம் உடைவது போல சத்தத்தோடு ஆரம்பித்தது. ஜாம் என்ற முதல் பாடல் ஒரு ராப். மைக்கேல் ராப் அதில்தான் முயற்சிக்கிறார். பாடல் வரிகளைப் பின் தொடருவத்தின் சிரமத்தை சொல்லவே வேண்டாம். அதிரடியான இசையின் பின்னணியில் முனுமுனுத்தது போல. அந்த ஒரு பாடலையே பல தடவை கேட்டேன். கேசட்டில் முதல் பாடலை ரீவைண்ட் செய்வது சுலபம். நடுவில் இருக்கும் பாடல்களைக் கேட்க ரீவைண்ட் செய்வது துன்பம். மற்ற பாடல்கள் ராப் இல்லாததால் பல தடவைகளுக்குப்பிறகு பிடிபட்டது. அதுவரை தமிழ் சினிமா பாடல்களையே கேட்டுவந்த எங்களுக்கு இது வேறு கதவுகளைத் திறந்தது. இந்தப்பாடல்களைக் கேட்கவே சனிக்கிழமைகளில் கார்த்தி வீட்டில் கிடப்பேன்.

+1 காலத்தில் கார்த்தி காதல் வயப்பட்டபோது அழகான ஆர்ட் தாளில் (இதையெல்லாம் உயர்ந்த ரசனையோடு செய்வான்) காதல் வரிகளோடு ஜாக்சனின் 'ரிமம்பர் தி டைம்' போன்ற பாடல்களின் வரிகளையும் (அதுக்கு என்ன புரிஞ்சுச்சோ?) எழுதிக்கொடுத்தான். கடிதம் சில நாட்களில் திரும்பி வந்தது.
சித்தரஞ்சன் வீட்டில் த்ரில்லர் கேட்டேன். அப்போது பல கேசட் கடைகளில் வெளுத்த வெளுத்த முகத்தில் சுருள் முடிகள் தொங்க, இறுக்கமான கருப்பு லெதர் ஆடையில் பல உலோக பக்கில்களோடு BAD என்ற ஆங்கில எழுத்துக்களோடு மைக்கேல் போஸ்டர் கட்டாயம் இருக்கும். கிருஷ்ணாபுரம் காலனியில் குடியிருக்கையில் வீட்டில் வாங்கிய அசம்பில்ட் செட்டில் மைக்கேலின் டேஞ்சரஸ் ஆல்பத்தை அலற விடுவேன். எனது சகோதரிகள் இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள். இளைய சகோதரர்கள் வேறு வழி இல்லாமல் என்னைப் பின் தொடர்ந்து இருக்கலாம்.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கையில் 'ஹிஸ்டரி' வந்தது. 200 ரூபாய் விலையில் இரண்டு கேசட் தொகுதியை மதுரை கீஷ்டுகானத்தில் வாங்கினேன். 'ஸ்க்ரீம்', 'தே டோன்ட் கேர் அபவுட் அஸ்', 'எர்த் சாங்' போன்ற புதிய பாடல்களோடு ஒரு கேசட். மற்றது 'பில்லி ஜீன்', 'பீட் இட்' போன்ற பழைய பாடல்களின் தொகுப்பு. காதலோடும் 'ஹில் தி வேர்ல்ட்' என்று உலகை ரட்சிக்கும் கனவோடும் இருந்த மைக்கேல் இல்லை இது. உலகத்தால் மன உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளான மைக்கேல். கோபமும் விரக்தியும் தெறிக்கும் பாடல்கள். பெரும் பொருளாதார நெருக்கடியைக் குடும்பத்தில் அனுபவித்துக்கொண்டிருந்த நான் எளிதாக அதில் ஒன்றினேன். இருநூறு ரூபாயை இதில் செலவழித்த குற்ற உணர்வும் கூட. நெருங்கிய நண்பனிடம் கூட நிலையைப் பகிர்ந்து கொள்ளாமல் மைக்கேலை போலவே வெளிறிய ஒரு முகமூடியை அணிந்து உலவிய காலம். 'த்ரில்லர்' மற்றும் 'டேஞ்சரஸ்' கால மைக்கேலை விட 'ஹிஸ்டரியின்' கதறும் மைக்கேல் நெருக்கமானவராயிருந்தார்.

இந்த காலத்தில் தான் வீடியோக்களை 'எம் டி வீ ' யில் பார்க்க முடிந்தது. இதற்க்கு முன் லயனல் வீட்டில் 'ஜாம்', 'ப்ளாக் ஆர் ஒயிட்' வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு இரவு லயனல் வீட்டில் பல நண்பர்களோடு சீ டி ப்ளேயரில் மைக்கேலைக் கதற விட்டோம். சுவாரஸ்யமான அந்த இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பீலிங்கில் இருந்தோம். அப்போது பலர் காதல் வயப்பட்டிருந்தனர். ஒருவன் தன காதலியோடு உணர்வு பொங்கக் கதைத்த போது ஸ்பீக்கர் போனில் கேட்டு சிரித்தோம்.
பிறகு 'ப்ளட் ஆன் தி டேன்ஸ் ப்ளோர்' வந்தது. 'கோஸ்ட்' வீடியோ மைக்கேலின் 'த்ரில்லர்' போன்ற வெற்றிக்கான முயற்ச்சி. 'த்ரில்லரே' மைக்கேலின் மிகப்பெரிய வெற்றியும் சுமையும் ஆனது. மீண்டும் அவரால் அதைச் செய்யவே முடியவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கான விசாரணை, பண நெருக்கடிகள் அவரைப் படைப்புலகிலிருந்து விரட்டியிருக்கலாம். பிறகு வெளிவந்த 'இன்வின்சிபிள்' ஆல்பத்தை நான் கேட்கவேயில்லை. எனது இளைய சகோதரன் அதைப்பற்றிக் குறிப்பிட்டபோது 'அப்படியா?' என்றதோடு முடிந்தது. கடந்த பதினைந்து வருடங்களில் ராக், ராப், ரிதம் அன் ப்ளூஸ், ஹிப் ஹாப் போன்ற இசை வடிவங்களில் 'நிர்வாணா', 'எரிக் கிளாப்டன்', 'எமினெம்', 'ரேடியோஹெட்' என்று கேட்டல் விரிவடைந்தது ஒரு காரணம்.

பண நெருக்கடியிலிருந்து மீள நீண்ட இசைப்பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்த போது இறந்து போனதாக நேற்று செய்தி. மைக்கேல் தன்னை மிகவும் நேசித்த ரசிகர்களிடமிருந்து அந்நியப்பட்டவராய் இறந்து போனார். மேற்சொன்ன அதே கால கட்டத்தில் என்னைப் பாதித்த இசை ஆளுமையான ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் மேடையில் இப்படி சொன்னார். ' எனக்கு முன்னால் அன்பும் வெறுப்பும் இருந்தன. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்'. இதை எழுதிக்கொன்டிருக்கும்போது கும்பகோணத்தில் இருந்து கார்த்தி கூப்பிட்டான். மொபைலில் 'ஹில் தி வேர்ல்ட்' என்று மைக்கேல். செந்திலண்ணன் அந்த கேசட்டை வாங்கிப் போடாமல் இருந்திருக்கலாம்.


Thursday, April 2, 2009

இலங்கைப் போரின் பயங்கரம் - அருந்ததி ராய்

சிறீலங்காவில் தற்பொழுது கட்டவிழும் பயங்கரத்திற்கான காரணம் அதைச் சூழ்ந்திருக்கும் மௌனமே. அங்கே நடப்பவை பற்றிய பதிவுகள் இந்திய வெகுஜன ஊடகங்களிலோ சர்வதேச ஊடகங்களிலோ கிட்டதட்ட இல்லை எனலாம். இது ஏன் இப்படி இருக்கிறது என்பது தீவிரமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்.


கிடைக்கும் சிறு தகவல்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால் பயங்கரவாதத்திற்க்கு எதிரான போர் என்ற காரணப் போர்வை கொண்டு சிறீலங்கா அரசு அங்கிருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தை நசுக்கவும் தமிழர்களின் மீது சொல்லொண்ணா குற்றங்களைப் புரியவும் செய்கிறது. ஒவ்வொரு தமிழனும் தீவிரவாதி எனும் கொள்கை அடிப்படையில் மக்கள் வாழ்விடங்கள், மருத்துவமனைகள் மற்றும் முகாம்கள் குண்டுகளால் தகர்க்கப்பட்டு போர்க்களமாகியுள்ளன. நம்பத்தகுந்த கணக்குகள் சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டும் எங்கின்றன. டாங்கிகளையும் வான்படையையும் கொண்டு சிறீலங்கா ராணுவம் வேகமாக முன்னேறுகிறது. அதே வேளை மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்தில் இடம் பெயர்ந்த தமிழர்களைத் தங்கவைக்க பல "நல்வாழ்வு கிராமங்கள்" அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தி டெய்லி டெலிகிராப் (பிப்ரவரி 14, 2009) செய்தியின்படி, " இந்த கிராமங்கள் போரிலிருந்து தப்பி வரும் அனைவரும் கட்டாயமாகத் தேக்கி வைக்கப்படும் மையங்களாக இருக்கும்". இது வதை முகாம்களின் மறு வடிவமா?


சிறீலங்காவின் முன்னாள் வெளிநாட்டு மந்திரி மங்கல சமரவீரா தி டெய்லி டெலிகிராபிற்க்கு கூறுகிறார்:” சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் கொழும்பில் உள்ள தமிழர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி அவர்களைப் பதிவு செய்ய ஆரம்பித்தது. 1930களில் நாஜிக்கள் செய்தது போல இது வேறு காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும். உண்மையில் அவர்கள் மொத்த தமிழர்களையும் தீவிரவாதிகளாக மாறக்கூடிய சாத்தியமுள்ளவர்களாக முத்திரை குத்தப் ". குடிமக்கள் மற்றும் "தீவிரவாதிகளின்" கொடும் வீழ்ச்சியில் காணப்படும் குறிப்பு, சிறீலங்கா அரசு புலிகளை அழிக்கும் சாக்கில் ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்துவதில் முடியுமென்பதாகவே உள்ளது. ஐ.நா.வின் கணக்குப்படி பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமுற்றிருக்கின்றனர். சில நேரடி சாட்சிகளின் விவரணைகளோஒரு நரகத்தின் கொடுங்கனவாக உள்ளன. சிறீலங்காவில் நாம் காண்பது என்னவென்றால் பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு அடாவடியான இன அழிப்பு போரே. தண்டிப்பாரின்றி சிறீலங்கா அரசாங்கம் இக்குற்றங்களைப் புரிவது உண்மையில் அதன் முன் தீர்மானமுள்ள உள்ளார்ந்த இன வெறியையே வெளிக்ககாட்டுகிறது. அதுவே அந்நாட்டில் தமிழர்கள் ஒதுக்கப்பட்டதற்க்கும் அன்னியமாக்கப்பட்டதற்க்கும் இட்டுச் சென்றது. சமூகத் தடை, பொருளாதாரத் தடை, இன வெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள் என இன வெறி வரலாறு நீண்டுள்ளது. முதலில் அகிம்சை வழிப் போராட்டத்தில் ஆரம்பித்த, தலைமுறைகளாக நீளும் இந்த குரூரமான உரிமைப் போரின் வேர் அங்கேயே உள்ளது.

ஏன் இந்த மவுனம்? மற்றொரு பேட்டியில் சமரவீர, "சுதந்திரமான ஊடகச் செயல்பாடுகள் இன்றைக்கு சிறீலங்காவில் இல்லவே இல்லை" என்கிறார். மக்களை 'பயத்தில் உறைய வைக்கும்' மரணப்படைக்குழுக்களையும் வெள்ளை வேன் கடத்தல்களையும் பற்றி சமரவீர சொல்லிக்கொண்டே போகிறார். மாற்றுக் கருத்துக்களைப் பேசுவோர், பல பத்திரிக்கையாளர்களையும் சேர்த்து, கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். பயங்கரவாத தடுப்புச்சட்டங்கள், மறைந்து போதல்கள் மற்றும் படுகொலைகள் போன்ற செயல்களின் மூலம் பத்திரிக்கையாளர்களை அடக்குவதாக சிறீலங்கா அரசை சர்வதேச பத்திரிக்கையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டுகிறது. சிறீலங்காவின் இந்த மனித நேயத்திற்க்கு எதிரான குற்றத்திற்க்கு உதவியாக இந்தியா தளவாடங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு உதவிகளைச் செய்வதாக சங்கடமேற்ப்படுத்தக்கூடிய ஆனால் உறுதிப்படாத செய்திகள் சொல்கின்றன. இது உண்மையானால் மிகவும் கொடுமையானது. பிற அரசாங்கங்கள் என்னவாயின? பாகிஸ்தான்? சீனா? இந்தச் சூழலுக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ அவர்கள் என்ன செய்கிறார்கள்?

சிறீலங்காவில் நடக்கும் போர் காரணமாக தமிழ் நாட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துள்ளனர். பொதுமக்களின் கோபமும் வலியும்,பெருமளவில் உண்மையானதும், கொஞ்சம் அரசியல் சதிராட்டங்களிலாளானதும், தேர்தல் பிரச்சினையாக முன்வைக்கப் படுகிறது. இப்பிரச்சினை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சென்றடையாமல் இருப்பது அசாதாரணமானது. ஏன் இங்கே இந்த மவுனம்? இங்கே 'வெள்ளை வேன் கடத்தல்கள்' - இந்த பிரச்சினை சம்பந்தமாவது - இல்லை. சிறீலங்காவில் என்ன நடக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் இந்த மவுனம் மன்னிக்க முடியாதது. முதலில் ஒரு பக்கம் சார்ந்தும், பிறகு மறுபக்கம் சார்ந்தும், இப்பிரச்சினையில் பொறுப்பற்ற செயல்பாடுகளை மேற்கொண்ட இந்திய அரசாங்கத்தின் நீண்ட வரலாறு அதை மேலும் உறுதிப் படுத்துகிறது.இதைப் பற்றி முன்பே பேசியிருக்கக்கூடிய என்னைப் போன்ற பலர், அதை செய்யாமலிருந்ததற்க்கு காரணம் போதுமான தகவல்கள் இல்லாமையே.ஆகப் படுகொலைகள் தொடருகையில், பல்லயிரக்கணக்கானோர் வதை முகாம்களில் அடைக்கப்படுகையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பசியால் வாடுகையில், ஒரு பெரும் இனப்படுகொலை நிகழவிருக்கையில், இந்த மாபெரும் தேசம் மவுனம் காக்கிறது. இது ஒரு மாபெரும் மானுடப் பேரழிவு. உலகம் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமிது. காலம் கடந்து விடும் முன்.