புயலுக்கு ஆயத்தம்
செய்பவன்!
சிகரட் முதலில்
இப்படி ஆரம்பிக்கிறது. முதல் பத்தவைப்பில் நீங்கள் மிக விழிப்புடன் இருக்கிறீர்கள்.
சூழல் உங்களை உற்றுக் கவனிக்கிறது. உங்களுக்கு அதைப் பற்றி அக்கறை இல்லை. சிகரட் கரைய
ஆரம்பிக்கையில் சூழல் மறைகிறது. தொடர்ந்த இழுப்புகளில் நீங்களும் சிகரட்டும் மட்டுமே
எஞ்சுகிறீர்கள். பின்பு ஏதோ ஒரு கணத்தில் நீங்களும் மறைய சிகரட் மட்டுமே எஞ்சுகிறது.
சிகரட் கூட இல்லை, வெறும் புகை மட்டுமே.
2008 பிற்பகுதியில் தொழில் ஒரு முட்டுச்சந்தில் நின்று திகைத்துக்கொண்டிருந்தது. பின்வாங்கி வேறு வழிகளைக் கண்டடைய விடாமல் அகங்காரம் தோளில் அழுத்தும் கணங்களில் சிகரட் ஒரு தோழனைப் போல இருந்தது. தொழில் பங்காளிகளிடம் வாங்கி ஒரு இழுப்பு இழுப்பதில் ஆரம்பித்தது பின் தனியே ஒரு சிகரட் சொல்லுமளவுக்குப் போனது. தொழில் அல்லது வாழ்வு சார்ந்தே முக்கியமானதும் மனக்கசப்பானதுமான முடிவுகளை எடுக்க மனம் ஆயத்தப் பட்டுக்கொண்டிருந்த வேளைகளில் சிகரட் இன்னும் நெருங்கியது. அது ஒரு pause பட்டன் போல. பற்றவைத்ததும் உலகம் உறைந்து விடும். கீழே போட்டு மிதிக்கும் கணத்தில் உலகம் resume ஆகும். புகைப்பது நடனத்தில் தோய்வதற்கு ஒப்பானது. அல்லது நடனத்தின் ஒரு பாவனையே தான்.
2008 பிற்பகுதியில் தொழில் ஒரு முட்டுச்சந்தில் நின்று திகைத்துக்கொண்டிருந்தது. பின்வாங்கி வேறு வழிகளைக் கண்டடைய விடாமல் அகங்காரம் தோளில் அழுத்தும் கணங்களில் சிகரட் ஒரு தோழனைப் போல இருந்தது. தொழில் பங்காளிகளிடம் வாங்கி ஒரு இழுப்பு இழுப்பதில் ஆரம்பித்தது பின் தனியே ஒரு சிகரட் சொல்லுமளவுக்குப் போனது. தொழில் அல்லது வாழ்வு சார்ந்தே முக்கியமானதும் மனக்கசப்பானதுமான முடிவுகளை எடுக்க மனம் ஆயத்தப் பட்டுக்கொண்டிருந்த வேளைகளில் சிகரட் இன்னும் நெருங்கியது. அது ஒரு pause பட்டன் போல. பற்றவைத்ததும் உலகம் உறைந்து விடும். கீழே போட்டு மிதிக்கும் கணத்தில் உலகம் resume ஆகும். புகைப்பது நடனத்தில் தோய்வதற்கு ஒப்பானது. அல்லது நடனத்தின் ஒரு பாவனையே தான்.
டேக் ஷெல்டர் (Take Shelter - 2011) நாயகன் கர்டிஸுக்கு பாவனை வேறு ஒன்றாக இருக்கிறது. அது (இல்லாத) புயலை எதிர்கொள்வது. படத்தின் ஒரு காட்சியில் கர்டிஸ் மன நல ஆலோசகரைச் சந்திக்கையில், அவர் கேட்பதற்கும் முன்பே தான் ஒரு ஸ்கிசோஃப்ரீனியாக் இல்லையென்றும், அதற்கான சுயபரிசோதனைப் தேர்வில் இருபதுக்கு 5 மதிப்பெண் தான் எடுத்திருப்பதாகவும், குறைந்த பட்சம் 12க்கு மேல் இருந்தால் தான் மனப்பிறழ்வு எனக் கருதப்படுமென்றும் கூறுகிறான். ஆலோசகர் திகைத்துப் போகிறார். கர்டிசின் பிரச்சினை அதுதான். அதி தீவிர முன்னேற்பாடு.
உண்மையில் நவீன மனிதனின் பிரச்சினை அது. அவன் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும். அந்த ’எல்லாவற்றில்’ என்னென்ன இருக்கும் என்றும் தெரியாததே அதன் அவலம். அப்படித் தெரியாததையும் எதிர்கொள்ள ஒருவன் பாவனையைக் கைக்கொள்கிறான். பாவனை பலவகைப்படும். தொழில், கலை, அரசியல் என. பாவனைக்கும் நிதர்சனத்திற்குமான கோடு மயங்கும் தருணம் மனம் பிறழ்கிறது. அல்லது விடுதலையடைகிறது.
கர்டிஸ் ஒரு பெரும் புயல் தாக்கப் போவதாகக் கனவு காண்கிறான். பெய்யும் மழை நீர் பெட்ரோல் போல மஞ்சளாய் இருக்கிறது. கனவில் அடையாளம் தெரியாதோர் அவனைத் தாகுக்குகிறார்கள். மகளைத் தூக்கிச் செல்கிறார்கள். அவனது நாய் அவனைக் கடித்துக் குதறுகிறது. நெருங்கிய நண்பனே அவனைத் தாக்குகிறான். பின்பு ஒரு நாள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிடுகிறான். கனவில் கடித்த நாயை வீட்டுக்கு வெளியே கட்டிப்போடுகிறான். கனவில் தாக்கிய நண்பனை பணியிடத்தில் வேறு குழுவிற்கு மாற்றச் செய்கிறான். ஆனால் அதற்கும் மேலாக விழித்திருக்கையிலேயே பெரும் இடிச் சத்தத்தை தொடர்ந்து கேட்கிறான். அதிர்ந்து நிமிர்ந்து மேலே பார்க்கையில் வானம் வெளிர் நீலத்தில் சிறிய வெண்மேகத்துடன் இருக்கிறது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் ஓரிரவு வானம் கடுமையாக இடித்து மின்னல் ஓட்டம் காட்டுகிறது. கரிய வானத்தில் மின்னல்கள் கிளை விட்டுப் பரவி இறங்கும் காட்சியில் மெய்மறந்திருப்பவன் சட்டென்று திரும்பி பார்க்கையில் சாலையில் வாகனங்கள் விரைவதைப் பார்த்து 'ஒருத்தன் கூட இதைக் கவனிக்கவில்லையா' என்று வியக்கிறான். சமந்தா (மனைவி) விரைவிலேயே எதோ பிரச்சினை இருப்பதைக் கண்டு கொள்கிறாள். கர்டிஸ் யாருக்கும் தெரிந்திராத ஒரு புயலை அஞ்சி வீட்டிற்கருகில் ஒரு பதுங்கு குழியை உருவாக்குகிறான். அதற்குத் தேவையான பணத்திற்கு வீட்டின் மேல் கடன் வாங்குகிறான். உச்ச கட்டமாக பதுங்கு குழியைத் தோண்டுவதற்காக வேலை செய்யும் இடத்திலிருந்தே எந்திரங்களைக் கொண்டுவந்ததன் நிமித்தம் பணி நீக்கம் செய்யப்படுகிறான்.
பணியிட விருந்தொன்றில் இவனால் தானும் பணி நீக்கத்திற்கு ஆளான நண்பன் இவனைத் தாக்க, கர்டிஸ் திரும்பித் தாக்குகிறான். பிறகு எல்லோரையும் பார்த்துக் கத்துகிறான். “ஒரு பெரிய புயல் வருகிறது. நீங்கள் இதுவரையில் காணாத அளவில். ஆனா, நீங்க ஒருத்தனும் இதற்கு தயாராக இல்லை.” சமந்தா பிரச்சினையின் தீவிரத்தை நேரில் கண்டு திகைத்துப் பின் ஆத்திரம் அடங்கி உடைந்தழும் கணவனைத் தாங்கிக் கொள்கிறாள்.
பிறிதொரு இரவில் இடி இடித்து மழை பொழிய, கர்டிஸ் மனைவி குழந்தையுடன் பதுங்கு குழிக்குச் செல்கிறான். உள்ளேயே உணவுக்குத் தேவையானதைச் சேமித்திருக்கிறான். கழிப்பிடமும் தூங்குமிடமும் கூட இருக்கிறது. மறு நாள் காலை சமந்தா பதுங்கிடத்தை விட்டு வெளியேறக் கேட்கிறாள். மேலேறித் திறப்பை அடைந்தவன், இன்னும் புயல் ஓயவில்லை என்கிறான். இல்லை ஓய்ந்துவிட்டதென்கிறாள். அவன் நீயே திற எனச் சாவியைக் கொடுக்கிறான். அவனே திறந்தாலொழிய அது முடிவுறாதென்கிறாள். வேறு வழியின்றி அவன் மேலேறித் திறக்கிறான். ஒளி தெறிக்கும் வெளிறிய வானம் கண்டு திகைக்கிறான்.
பின்பொரு நாள் முன்பே திட்டமிட்ட வகையில் ஒரு கடற்கரை வீட்டில் ஓய்வுக்காக செல்கிறார்கள். கர்டிஸ் மகளுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் அவள் கடலில் தூரத்தே எதையோ காட்டுகிறாள். இப்போது மனைவியும் அதைக் காண்கிறாள். கருமேகம் திரண்டு சுழித்துக் கடலில் இறங்குகிறதை. பிறகு பெய்யும் மழை பெட்ரோலைப் போல மஞ்சளாயிருப்பதை.
