அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ஃபீனிக்ஸில் வேலை பார்க்கப் போவதாக பாலாஜி சொன்ன போது நான் ஒரு
விதமாகக் கிளர்ச்சியடைந்ததை அவனால் புரிந்து கொண்டிருக்க முடியாது. மேலும் அங்கிருந்து
அவன் பேசும்போதெல்லாம் அவனை க்ராண்ட் கான்யான் (Grand Canyon) போய்ப் பார்க்குமாறு
வற்புறுத்திக் கொண்டிருந்தேன். அவன் அதைச் செய்யாமல் போனதில் நான் எதை இழந்தேன் என்று
தெரியவில்லை.
இது ஒரு வகை வாயரிஸம்
(vouyerism) போல. நான் ஒரு போதும் சென்றிருக்காத ஒரு இடம் இவ்வளவு உணர்வூட்டுவதில்
எனக்கு ஆச்சரியம் இல்லை. நான் பள்ளிப் பாடம் தவிர்த்து முதலில் படித்த காமிக்ஸ்கள்
வழியாக நான் ஏற்கனெவே அங்கு சென்றிருக்கிறேன். உயர்ந்த கள்ளிச் செடிகளும் பெரும் பாறைகளும்
பள்ளத்தாக்குகளும் நிறைந்த அரிசோனாவின் நிலத்தில், ஒரு செங்கல் நிறக் குதிரையில் இடுப்பு
பெல்ட்டில் தொங்கும் துப்பாக்கிகளோடு தொப்பியை முன்னால் சரித்தபடி அலைந்திருக்கிறேன்..
இரண்டாவது மூன்றாவது வகுப்பு படிக்கும் போதே காமிஸ்கள் படிக்க ஆரம்பித்திருந்தேன்.
அதோடு, அக்கா செயின்ட் ஜோசப் பள்ளியிலிருந்து கொண்டு வரும் சிறு பிரசுரங்களில் இருந்த
பைபிள் கதைகளும் வாசிப்பின் தொடக்கம். ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமா, பாலமித்ரா
போன்றவை அவனியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்த கடையில் கிடைத்தது. அந்தப் பக்கம்
போகும்போதெல்லாம் புதிதாக எதுவும் தொங்குகிறதா என்று பார்ப்பேன். வீடு செழித்திருந்த
காலமாகையால் கையில் கொஞ்சம் காசு புழங்கியது. புத்தகம் கிடைக்காததுதான் குறை. தெற்குவாசல்
போனால் எல்லாம் கிடைக்கும். கொஞ்சம் தள்ளி பெரியார் நிலையம் போனால் என்னன்னவோ பேரிலெல்லாம்
காமிக்ஸ்கள் கிடைக்கும். என்ன கொஞ்சம் நம்மூர் ஒவியர்களே தங்கள் கைத்திறமையைக் காட்டிக்
கலங்கடித்திருப்பார்கள். ராணி, முத்து, திகில் காமிக்ஸ்களின் சித்திரத் தரம் அவற்றில்
இல்லையென்றாலும் வேறு வழியின்றி கண்டதையும் படித்தேன். தெற்குவாசல் போக என்னைவிட வயதில்
மூத்த ஒரு நண்பர் இருந்தார். அவரிடம் 5 ரூ கொடுத்தால் ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு,
தெற்குவாசலோ பெரியாரோ போய்க் கிடைத்ததெல்லாம் வாங்கி வருவார். அப்பொது ராணி காமிக்ஸ்
1.50 ரூ தான். சைக்கிள் வாடகை என்ன ஒரு அய்ம்பது பைசா இருக்கும். மீதத்துக்கு குறைந்தது
2 புத்தகமாவது வாங்கலாம். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு. சில சமயம் கைய விரித்து விடுவார்.
அந்த சமயம் இதெல்லாம் ஒரு ஊரான்னு வரும்.
அப்போதைய ராணி
காமிக்ஸின் பிரதான கதாபாத்திரம் 007 ஜேம்ஸ்பாண்ட் தான். பளபளக்கும் ஷூவோடு நேர்த்தியாக
உடையணிந்திருப்பார். சினிமாவைப் போலவே காமிக்ஸிலும் ஒரு பரபரப்பான ஆக்ஷன் காட்சியோடுதான்
வருவார். பல கதைகளின் அட்டைப் படங்கள் தெளிவாக நினைவில் உள்ளன. ஜேம்ஸ்பாண்ட் ஒரு க்ளைடரில்
பறந்தவாறு ஒரு அட்டைப் படம், ஒரு கவ்பாய் குதிரையில் நிற்கும் படம் (பலி வாங்கும் பணம்
என்று நினைக்கிறேன்) போலப் பல நினைவில் இருக்கின்றன. டைகர், ஜேம்ஸ், இன்ஸ்பெக்டர் ஆசாத்
போன்ற தொடர் நாயகர்களின் கதைகளோடு தனிக்கதைகளும் ஏராளம் வந்தன. அதில் பல அற்புதமான
வெஸ்டென் (கவ்பாய் கதைகள்) கதைகள் இருந்தன. அமெரிக்க ராணுவத்தால் தவறாகத் தண்டிக்கப்
படும் ஒரு படைத்தலைவர் செவ்விந்தியர் பக்கம் சேர்ந்துகொண்டு வெள்ளையருக்குப் பெரும்
சேதத்தை ஏற்படுத்த, அவர் பக்க நியாயத்தை உணர்ந்த நாயகன் சமாதானம் பேசப் போய்த் தோற்று
வருகிறான். இக்கதையின் ஒரு கட்டத்தில் (உண்மையிலேயே ஒரு கட்டத்தில்தான்), செவ்விந்தியர்கள்
முடமான அவரைத் தூக்கிச் செல்லும் காட்சி ஒரு திரைப்படத்தின் உச்சக் காட்சியைப் போல
மன எழுச்சியைக் கொடுத்தது. இப்போது யோசிக்கையில் நான் வாழ்வின் துக்கமான தருணங்களை
எழுத்தில் (படமும் சேர்ந்துதான்) வாசிக்க ஆரம்பித்தது காமிக்ஸில் தான் என்று தோன்றுகிறது.
சித்திரம் எழுத்தின் ஒரு பகுதியாகவே காமிக்ஸில் இருக்கிறது.
லயன் காமிக்ஸ்
ராணியிலிருந்து வேறுபட்டிருந்தது. சிறிய வடிவம், சிறிய சித்திரங்கள், தடித்த உரு என்று
இருக்கும். தீபாவளிக்கோ ஆண்டு விழாவுக்கோ ரூ 5 விலையில் ஏழெட்டுக் கதைகளோடு வரும்.
முடிவே இல்லாமல் படித்துக்கொண்டிருக்கலாம் போல இருக்கும். ராணி காமிக்ஸில் வடிவை மாற்றவே
மாட்டார்கள். வாழ்வின் சகல கணங்களையும் ஒரே மாதிரி எதிர்கொள்ளும் துறவி போல ஒரே வடிவம்.
ஆறாம் வகுப்பிலிருந்து
தெப்பக்குளம் அருகில் தியாகராசர் மாடல் பள்ளி. அதுவரை வேனில் போய்க்கொண்டிருந்தவன்
பாண்டியன் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி அவனியாபுரத்திலிருந்து பெரியார் நிலையம்,
அப்புறம் 4ம் நம்பரில் ஏறி தெப்பக்குளம் என்று போக ஆரம்பித்தேன். பலரும் 4A அனுப்பானடி
செல்லும் பேருந்தில் ஏறி பள்ளிக்கு அருகே இறங்கிக் கொள்ள நான் மட்டும் தெப்பக்குளத்தில்
இறங்கி தனியே நடந்து போவேன். இனிமேல் வாழ்வில் எல்லாவற்றையும் எனக்கு நானே செய்துகொள்ளலாம்.
பேருந்தில் பெரிய அண்ணன்களுடனும் அக்காக்களுடனும் பயணம் செய்வது கிளர்ச்சியூட்டக்கூடியதாயிருந்தது.
அப்போது நான் வீட்டில் கிடைத்த சாண்டில்யன் நாவல்களைப் படிக்க ஆரம்பித்திருந்தேன்.
பிறகு ஒரு நாள் பள்ளியில் நீயூ சென்ச்சுரி புக் ஹவுஸின்(NCBH) புத்தகங்கள் விற்றார்கள்.
நேர்த்தியான வடிவில் நம்ப முடியாத குறைந்த விலையில் ரஷ்ய நாவல்கள். விடிவெள்ளி (யார்
எழுதியது என்று தெரியவில்லை) என்ற நாவல், அலெக்சாண்டர் பூஷ்கினின் காப்டன் மகள் போன்ற
சில புத்தகங்கள் வழியாக ரஷ்ய இலக்கியம் அறிமுகமானது. சித்திரங்கள் இல்லாத எழுத்தைப்
படிப்பதே பெரியவனுக்கு அழகு என்று நம்ப ஆரம்பித்தேன். தடியான, கார்க்கியின் ’தாய்’
நாவலை முடித்த போது பெரிய சாதனையச் செய்த மன எழுச்சியோடு வீதியில் இறங்கி நடந்தேன்.
ஒரு வகையில் பார்த்தால்
நான் விட்டு வந்த இடத்திலேயே தமிழ் காமிக்ஸ் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. வாசகர்கள்
அங்கேயே நின்று விட்டார்களோ என்று தோன்றுகிறது. தமிழில் காமிக்ஸ் சந்தை விரிவடையவே
இல்லை. கடந்த இருபது வருடங்களில் தொலைக்காட்சி இளம் வயதினரிடையே வாசிப்பை, அதுவும்
தமிழில், ஒழித்துக் கட்டியிருக்கிறது. தமிழ் காமிக்ஸைப் பொருத்தவரை பழைய வாசகர்களையே
தக்க வைக்க பதிப்பகங்கள் (லயனின் விஜயன் ஒரு போராட்டமாகவே இதை முன்னெடுக்கிறார்) போராட
வேண்டிய சூழல். விரிவடையாத சந்தையில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட முடியாது என்பதே
உண்மை.
சில வருடங்களுக்கு
முன்பு மீண்டும் ஆலன் மூரின் ’ஃப்ரம் ஹெல்’ (Allan Moore-From Hell) வழியாக காமிக்ஸில் நுழைந்தேன்.
ஆர்ட் ஸ்பீகல்மேனின் ’மாஸ்’ (Maus), ஒசாமு டெசுகாவின் ’புத்தா’ (Osamu Tezuka
–Buddha) என்று க்ராஃபிக் நாவல்கள் வழி இழந்ததை மீட்டெடுக்க முயல்கிறேன். இணையம் பெரிய
வரம்தான். இப்போது, எனது லாப்டாப்பின் 14 இன்ச் LED திரையில், சின்னச் சின்னக் கட்டங்கள்
வழியே காமிக்ஸ்கள் வாழ்வைப் பிரதியெடுத்துக் கொண்டேயிருக்கின்றன. ஓயாமல்.