Thursday, September 12, 2013

ஜேங்கோ அன்செயின்டு (Django Unchained ) - சில குறிப்புகள்


பூமணியின் 'அஞ்ஞாடி' நாவலில் ஒரு இடம் வருகிறது. நாடார்களின் தோல் சீலைப் போராட்டத்தின் உச்சியில் ஒரு கொந்தளிப்பான கட்டத்தில் திவான் திருவிதாங்கூர் மகராசாவிடம் பேச, அவர் பிரச்சினையைத் தீர்க்கவெண்ணி, "நாடார் பெண்கள் சீலை போடுறதுனால ஒன்னும் ஆயிடாதில்லையா?" என்கிறார். அதற்கு திவான், 'என்னருந்தாலும் ரெண்டு பொம்பிளைகளுக்கும் வித்தியாசம் வேணுமில்லையா?' என்று பதறுகிறார். அதற்கு ராசா, "போட்டுக்கலாம். ஆனா மேல்சாதிப் பொம்பிளைக சாயலில் போடக்கூடாது" என்று முடிவு சொல்கிறார்.  க்வெண்டின் டரன்டினோ வின் ஜேங்கோ வில் அப்படி ஒரு காட்சி வருகிறது. டாக்டர் ஸ்சுல்ட்சும் ஜேங்கோவும் ஒரு பண்ணையில் நுழைகிறார்கள். கருப்பர்கள் யாரும் குதிரையில் சவாரி செய்யக்கூடாது என்று சொல்லும் பண்ணை முதலாளியிடம்  ஸ்சுல்ட்ஸ் ஜேங்கோ தனது வேலையாள் என்றும் அவன் ஒரு சுதந்திர மனிதன் என்றும் சொல்கிறார். முதலில் மறுக்கும் முதலாளி பின்பு வியாபார ஆசை உந்த ஸ்சுல்ட்சை உள்ளே கூப்பிடுகிறார். ஸ்சுல்ட்ஸ் பண்ணை முதலாளியிடம் ஜேங்கோவை அடிமையாகப் பார்க்கக் கூடாதென்றும் தன்னுடைய நீட்சியாகவே பார்க்கவேண்டும் என்றும் சொல்கிறார். அதோடு வியாபாரம் பேசும் நேரத்தில் ஒரு வேலைக்காரப் பெண்ணை விட்டு ஜேங்கோவிற்கு அந்தப்  பண்ணையைச் சுற்றிக்கான்பிக்குமாறும் வேண்டுகிறார். சரியென்ற முதலாளி ஒரு அடிமைப் பெண்ணைக் கூப்பிடுகிறார்.
"பெட்டினா, ஜேங்கோவை கூட்டிக்கொண்டு இங்குள்ள எல்லா அழகான இடத்தையும் சுற்றிக் காமி"
"நீங்க விரும்புற மாதிரியே செய்யிறேன் ஐயா"
"ஜேங்கோ ஒரு அடிமையில்லை. சுதந்திர மனுசன். நீ மத்த நிக்கர்களைப் போல ஜேங்கோவை நடத்தக் கூடாது. ஏன்னா ஜேங்கோ மத்த நிக்கர் போலக் கெடையாது"
"வெள்ளைக்காரங்கள நடத்துரதப் போல ஜேங்கோவை  நடத்த சொல்றீங்களா?"
"இல்ல. நான் அப்படிச் சொல்லல"
"அப்ப நீங்க என்ன விரும்புறீங்கன்னு எனக்குத் தெரியலைய்யா "
சற்று குழம்பிய பண்ணை பக்கத்திலிருக்கும் வேலைக்காரப் பெண்ணிடம் கேட்கிறார்.
"டவுனிலிருந்து வந்து கண்ணாடி வேலை செய்யிற அந்தப் பையன் பேரென்ன. அவங்கம்மா கூட மரக்கடையில வேல செய்யிறா"
"ஜெர்ரி"
"ஆ. ஜெர்ரி . உனக்கு ஜெர்ரியத் தெரியுமில்ல?"
"தெரியும் யா"
"அப்ப சரி. நீ ஜெர்ரிய நடத்துரதப் போல ஜேங்கோவ நடத்து"
 இங்கே ஜெர்ரியைக் குறிக்கையில் 'பெக்கெர்வுட் பாய்' (Peckerwood) என்கிறார் பண்ணை. அப்படியென்றால் 'கீழான, மதிக்கத் தேவையற்ற' என்றும் அர்த்தம் வருகிறது.

டம் முழுவதும் இசைக் கோவைகளால் நிரம்பியிருக்கிறது. அல்லது இசையின் இடையே நாடகம் நிகழ்த்தப்படுகிறது. பலமுறை கண்டு மனப்பாடம் ஆன செர்ஜியோ லியோனின் புகழ் பெற்ற வெஸ்டெர்ன்  படங்களின் ஆதர்ச இசையமைப்பாளர் என்னியோ மாரிகோன் பங்களிப்பும் இதில் உள்ளது. படத்தில் பல இடங்களில் காட்சியும் இசையும் வெறி கொண்டு புணரும் பாம்புகளைப் போல முயங்கிக் கலக்கின்றன. குறிப்பாக பண்ணையில் பிரிட்டில் சகோதரர்களை அடையாளம் கண்டு கொல்லும் போது வரும் இசை (Luis Bacalov - La Corsa (2nd version) ). மெதுவாய் நகரும் பாம்பாய் நெளிந்து விரைந்து பின் நின்று உயர்ந்து படமெடுக்கும். ஹில்டா வை தண்டனைக் குழியிலிருந்து வெளியே எடுக்கும் போது வரும் இசை ( Ennio Maricone - Sister Sara's Theme ). இன்னும் பல பாடல்களும் ( Ancora Qui – Elisa Toffoli, Freedom – Anthony Hamilton, Elayna Boynton, 100 Black Coffins – Rick Ross) படத்தை பெரும் நாடகமாக்குகின்றன. சில ஹிப் ஹாப் பாடல்களும். கருப்பு பௌன்டிஹன்டரைப் (அரசாங்கப் பரிசுப் பணத்துக்காக குற்றவாளிகளை வேட்டையாடுபவர்கள்) பாட மென்மையாக கிடாரை இசைக்கும் கன்ட்ரி பாடகர்கள் மட்டும் போதவில்லை போலும்.


ப்ரிட்டில் சகோதரர்களைக் கொன்ற பிறகு இரவில் வெட்டவெளியில் ஓய்வெடுக்கும் ஜேங்கோவையும் டாக்டர் ஸ்சுல்ட்சையும் கொல்ல பண்ணை ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருகிறார். கண்கள் மட்டும்  பார்க்கும் படிக்கு இரண்டு ஓட்டைகள் போட்ட பையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு வரும் கூட்டம் ( Ku Klux Klan  -  இந்தப் பின்னணியில் ஒரு டெக்ஸ் வில்லர் காமிக்ஸ், ஜான் கிரிஷாமின் The Chamber படித்ததுண்டு). பையைத் தலையில் மாட்டிக்கொள்வதில் பிரச்சினை வருகிறது. பண்ணை நன்றாகப் பார்க்கத் தோதாக ஓட்டையைப் பெரிதாக்க முயல பை கிழிகிறது.
" ஒ ஷிட், நான் இத மோசமாக்கிட்டேன்."
" யாரு இந்தக் கேவலமானதச் செஞ்சது?"
"வில்லார்டோட  பொண்டாட்டி."
"அப்ப நீங்களே உங்கத செஞ்சுக்கங்க."
"இங்க பாரு ஜென்னி செஞ்சதப் பாராட்டக்கூடாதுன்னு யாரும் சொல்லல."
"நான் சொல்லுறது என்னன்னா, பையில ஓட்டை போடுரதுதான் செய்யணும்னு இருக்குறப்ப இத விட நல்லாவே போட்டுருப்பேன்."
" ஒனக்கு எப்பிடி ராபர்ட் பாக்க முடியுதா?"
"ரெம்ப நல்லால்ல. அதாவது நான் தலைய அசைக்கலன்னா உன்ன நல்லாப் பாக்கமுடியுது. குதிரைய ஓட்டுறப்ப பை தலையில ஆடிக்கிட்டு, குருடன் போல சவாரி செய்றேன்."
"நான் இப்ப என்னோடத மோசமாக்கிட்டேன். யாராவது எக்ஸ்ட்ரா பை கொண்டுவந்துருக்கீங்களா?"
"இல்ல, ஒருத்தனும் எக்ஸ்ட்ரா பை கொண்டு வரல்ல."
 "நான் கேக்கதான் செஞ்சேன்."
" நாம சவாரி போறப்ப இதப் போட்டுக்கத்தான் வேணுமா?"
"நீ சவாரி செய்யிரப்ப இதப் போட்டுக்கலன்னா அது நோக்கத்தையே  கெடுத்துரும்."
"ஆனா இதுல என்னால பாக்க பாக்க முடியல. என்னால மூச்சு விட முடியல. சவாரி செய்ய முடியல"
"நீங்க எல்லாரும் ங்கோத்தா நாசமாப் போங்க. நான் வீட்டுக்குப் போறேன். உங்கள மாதிரி நன்றி கேட்ட தேவடியாப் பசங்களுக்கு நாள் முழுக்க என் பொண்டாட்டி இந்த 30 பையையும் செய்றதப் பாத்துட்டு இங்க வந்தா நான் கேக்கிறதெல்லாம் ஒரே குத்தம் குறை. இப்பருந்து எங்கிட்ட எதையும் கேக்காதீங்க."- பைகள் ஏற்பாடு செய்தவன் கோபமாகப் போகிறான்.
" சரி நாம இப்ப ஏன் இங்க வந்தமுன்னு  மறந்திரக் கூடாது. அந்த மலையத் தாண்டி ஒரு கொலைகார நிக்கர் இருக்கான். அவன் மூலமா ஒரு பாடத்தக் கத்துக் குடுக்கனும்"
"ஓகே, ஆனா எனக்கு குழப்பமா இருக்கு. பையப் போட்டுக்கிட்டா போடாமலா?"
"இந்தப் பை நல்ல ஐடியான்னு நான் நெனச்சேன், நாம எல்லாரும் நெனச்சோம். ஆனா யாரையும் குத்தம் சொல்லாமப் பாத்தா இத இன்னும் நல்லாச் செய்துருக்கலாம். அதனால  நாம ஏன் பை இல்லாம இந்த தடவ போகக் கூடாது? அடுத்த தடவ  பையச் சரியாப் பண்ணிக்கிட்டு முழு வேசத்துல போவம்"
"எனக்கு இந்த ஐடியா பிடிச்சிருக்கு"
பண்ணை கடுப்பாகி குறுக்கிடுகிறார்.
"ஒரு நிமிஷம் இருங்க. பை வேணாம்னு நான் சொல்லலையே"
"ஆனா யாரும் பாக்க முடியல"
"அதனாலென்ன?"
"அதனாலென்னன்னா பாக்க முடிஞ்சா நல்லாருக்கும்"
"நாசமாப் போக, இது ஒரு தாக்குதல். நான் பாக்க முடியல. நீ பாக்க முடியல. அதனாலென்ன? குதிரையால பாக்க முடியும்கிறது தான் முக்கியம். அதுதான் தாக்குதல்."
அப்புறம் பையைப் போட்டுக் கொண்டு தாக்குகிறார்கள். பகடியின் உச்சம்.

வெவ்வேறு விதமான கருப்பர்கள் படம் நெடுகிலும் வருகிறார்கள்.  வரிசையாக விலங்கிடப்பட்டு விற்பனைக்காகக் கொண்டு செல்லப் படுபவர்கள்.எசமானுக்காகச் சண்டை போட்டுச் சாகிறவர்கள். தப்பிக்க முனைந்து, பிடிபட்டு, நாய்களால் குதறப்பட்டு சாகிறவர்கள். இப்படி.  படத்தில் வரும் இன்னுமொரு ஆப்பிரிக்க அடிமை குதிரையின் மீது சவாரி செய்யும் ஜேங்கோவை வெறுப்புடன் பார்த்துக் காறி உமிழ்ந்தவாறே வருகிறான். இறுதியில் ஜேங்கோ வெள்ளையர்களைத் தந்திரமாக ஏமாற்றித் தப்பிக்கையில் உறுத்தல் சிறிதுமின்றி அவர்களைக் கொல்கிறான். அடிமை அதைப் பார்த்து ஜேங்கோவை வியக்கிறான். வியாபாரப் பண்டம் சுயத்தைப் பார்த்து பிரமிக்கிறது.

டைசியாகக் கேண்டிலேன்ட் பண்ணையில் வரும் கருப்பர் பண்ணை முதலாளி கால்வின் கேண்டியையே அதிகாரம் பண்ணுகிறார். வெளியில் தான் அப்படியென்றால் எல்லாரும் பார்க்க தனியாக முதலாளியை விருந்திலிருந்து அழைத்து ரகசியம் உடைக்கையில் கூட கையில் ஒய்னோடு சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து தோரணையாகப் பேசுகிறார். ஸ்டீபன் (டரன்டினோவின் முந்தைய பல படங்களில் வந்த சாமுவேல் எல். ஜாக்சன்- பல்ப் பிக்ஷன் (Pulp Fiction) நினைவு கூறுங்கள்) ஆக வரும் அந்த கதாபாத்திரம் மிகவும் நுட்பமானது. கிட்டத்தட்ட பண்ணையை அவரே மேலாண்மை செய்கிறார். நாம் இதை வியக்கையில் விளக்கம் பண்ணை முதலாளி கால்வின் கேண்டி மூலமாக வருகிறது. விருந்து மேசையின் மீது ஒரு வெல்வெட் பலகையை வைத்து அதன் மேல் ஒரு மண்டையோட்டை வைக்கிறார்.
" இது பென். இங்க ரெம்ப காலம் வாழ்ந்தவர். இங்கருக்குற ஓல்ட் பென் என்னோட அப்பாவப் பாத்திக்கிட்டாரு, என் அப்பாவோட அப்பாவப் பாத்துக்கிட்டாரு. செத்து மேல போற வரைக்கும் என்னைப் பாத்துக்கிட்டாரு. மிஸ்ஸிசிப்பியில பெரிய பண்ண முதலாளி மகனா வளர்றது ஒரு வெள்ளக்காரன ஏகப்பட்ட கருப்பு மூஞ்சிகளோட தொடர்பு கொள்ள வைக்குது. என் மொத்த வாழ்க்கையையும் இங்கதான் கழிச்சேன், இந்த கேன்டிலேண்டில். கருப்பு மூஞ்சிகள் சூழ. அவங்கள ஒவ்வொரு நாளும் பொழுதும் பாக்கையில எனக்கு இப்ப ஒரே ஒரு கேள்வி தான் தோணுது. ஏன் அவங்க நம்மளக் கொல்லக் கூடாது. இந்தா அங்கருக்கிற வாசல்ல, வாரத்துக்கு மூணு தடவ அம்பது வருசமா ஒரு கூரான கத்தியால பென் எங்கப்பாவுக்கு சவரம் பண்ணி விடுவாரு. இப்ப, நான் பென்னா இருந்திருந்தா எங்கப்பாவோட கழுத்த அறுத்திருப்பேன். அதோட அதைச் செய்ய எனக்கு ஒரு அம்பது வருசமும் ஆயிருக்காது. ஆனா அவர் அதை செய்யவே இல்ல. ஏன் கூடாது?"
கால்வின் கேண்டி மண்டையோட்டை அறுக்கிறார். பிறகு ஒரு ஆப்பிரிக்கன் ஏன் அதைச் செய்ய முடியாதென்று Phrenology அடிப்படையில் விளக்குகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை மேலாதிக்கத்தை 'அறிவியல்' பூர்வமாக நிறுவ இது போன்ற பல அறிவுத் துறைகள் இருந்திருக்கின்றன போலும். 

நான் படித்த உயர்மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை, விளையாட்டுத் திடலின் முடிவில் ஒரு தோப்பை ஒட்டி இருந்தது. ஒரே நெட்டுவாக்கில் மாணவர்கள் வரிசையாக மூத்திரம் பெய்யும் வகையில். உடனொத்தவர்கள் வரிசையாகக் குறியைத் தாழ்த்தி மூத்திரம் பெய்கையில் யாராவது சேட்டைக்காரன் வெட்கமின்றி குறி நிமிர்த்தி சுவரில் சித்திரம் வரைவான். டரன்டினோவைப் போல.


Sunday, April 28, 2013

யாவருடனும் தனியாக


தை எலும்பைப் போர்த்துகிறது
அதற்குள்ளாக அவர்கள் ஒரு மனத்தை வைக்கிறார்கள்
அத்தோடு சில சமயங்களில் ஒரு ஆன்மாவையும்.

பெண்கள் சுவர்களின் மீது
சாடிகளைப் போட்டு உடைக்கிறார்கள்
ஆண்கள் மிக அதிகமாகக் குடிக்கிறார்கள்.

ஒருவரும் அந்த ஒன்றைக் காண்கிறதில்லை
என்றாலும் 
தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்
படுக்கையில் விழுந்தும் எழுந்தும்.

சதை எலும்பைப் போர்த்தியிருக்கிறது
அத்தோடு
சதைக்கும் மேலானதொன்றை
சதை தேடுகிறது.

எப்படியும் ஒரு வாய்ப்புமில்லை.
நாமெல்லாரும் ஒற்றை விதியால் சிக்குண்டுள்ளோம்.

எப்போதும் எவரும்
அந்த ஒன்றைக் கண்டடைகிறதில்லை.

நகரக் குப்பைமேடுகள் நிறைகின்றன
வீண்பொருட் களங்கள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிரம்புகின்றன
மருத்துவமனைகள் நிரம்புகின்றன
கல்லறைகள் நிரம்புகின்றன.

வேறதுவும் நிரம்புகிறதில்லை.

சாள்ஸ் புகாவ்ஸ்கி  

Wednesday, March 13, 2013

ராஜு என்றழைக்கப்பட்டவர்


றேழு மாதங்களுக்கு முன் அண்ணன் வீட்டில், மாத்திரை சாப்பிடுவது சம்பந்தமாக அண்ணன் கூறிய கடுமையான வார்த்தைக்கு கண்களில் நீர் கோர்க்க அப்பா கூறிய வார்த்தைகளை இங்கே எழுத விரும்பவில்லை. 'எப்படி வாழ்ந்தவன் நான்' என்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் தான் வேளாவேளைக்குச் சாப்பாடும் இரவில் இன்சுலினும் மருந்து மாத்திரைகளும் கிடைத்தாலும் அவரால் அந்த வீட்டில் இருக்க முடியவில்லை. அவருக்குத் தேவைப்பட்டது கொஞ்சம் மரியாதையான சுதந்திரம். சட்டென்று ஒருநாள் ஆட்டோ ஏறி அவனியாபுரம் சென்று விட்டார். அங்கே சற்று வசதிக் குறைவிருந்தாலும் நிம்மதியாக இருந்திருப்பார். ஏனென்றால் அவனியாபுரம் வீட்டில் தம்பி சொல்வதை அவர் சட்டை செய்பவரல்ல.

அவர் அவனியபுரத்திலிருந்த நாட்களில் நான் அவரைப் பார்க்கப் போகவேயில்லை. ஒரு வசதியும் இல்லாத இடத்திலிருந்து கொண்டு சங்கடப்படுத்துகிறார் என்ற கோபம். நான் என்ன நினைத்தால் என்ன, அவர் மூர்த்தியின் மடியில் உயிர் பிரியும் வரையில் அவர் நினைத்ததையே செய்தார். பணம், கவனிப்பு, வசதி போன்றவற்றினால் கட்டுபடுத்தப் படாது உயிர் பிரியும் வரையிலும் தான் நினைப்பதைச் செய்யும் சுதந்திரமே ஒருவருக்கு தேவை போல.

அவர் அவனியாபுரம் செல்வதற்கு முந்தைய மாதங்களில், இரவுகளில் அவருக்குப் பணிவிடை செய்தது எனது குற்ற உணர்ச்சியை சிறிது குறைக்கிறது. இரவு ஆறேழு தடவை சிறுநீர் கழிப்பார். 'யப்பா' என்றவுடன் எழுந்து கொண்டுபோய் கழிவறையில் விடவேண்டும். இல்லையென்றால் படுக்கையில் போய்விடுவார். மீறிப் போய் விடும் தருணங்களில் காலை எழுந்ததும் பார்த்து  மிகவும் வெட்கமாய்ப் போய்விடும். அசிங்கமாகவும் உணர்ந்தார். விஷயம் கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்ற உணர்வே முதுமையின் துன்பம். வெட்கமும் இறுக்கமும் கொண்டவர்க்கு சாவே விடுதலை.

ஆனால் அப்பா அதை மருந்துகளின் துணை கொண்டு வெல்ல நினைத்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவர் ஏதேனும் ஒரு மாத்திரையை தினந்தோறும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எனது சிறு வயதில் LIV 52, Digene, Gelusil போன்றவையோடு பிரச்சினைக்குத் தக்க வேறு மருந்துகளும் தொடர்ந்து எடுத்து வந்தார். டாக்டர் சொன்னதை ஒழுங்கு பிறழாது செய்தார். கடைசி நாட்களில், சிறுநீரகம் பழுதாகிவிட்டது என்றும் மருந்துகளால் இனி பலனில்லை என்றும் டாக்டர் சொல்ல, இவர் டாக்டரையே மாற்றிவிடலாம் என்றார். அதே பிடிவாதம் தான் நான் 3 வயதில் போலியோ தாக்கி நடக்க முடியாமல் போனபோது அவரைப் பல  இடங்களுக்கும் என்னைச் சுமக்க வைத்திருக்கிறது. டாக்டர்கள் கைவிரித்த போதும் சோராமல் பலனே அளிக்காத பலவிதமான எண்ணைகளையும் எனது மெலிந்த கால்களில் இரவு தூங்காமல் தேய்த்து விட்டிருக்கிறார்.

மாத்திரைகள் பொய்க்காது என்ற தீவிர நம்பிக்கை அவருக்கு கடைசிவரை இருந்தது. அல்லது நம்பிக்கை கொள்ள ஏதேனும் அவருக்குத் தேவைப் பட்டிருக்கலாம். மருந்துகளால் பலனில்லை என்றால் உபாதைகளை என்ன செய்வது என்ற பயங்கரம் அவரைச் சூழ்ந்திருக்கும். அலோபதியினால் அதைக் கடக்க முயன்றார். சிறிய மாத்திரை டப்பா பெரியதாகி அவர் இறக்கும் போது அது மாத்திரைப் பட்டைகளால் நிரம்பிக் கிடந்தது.

அப்பாவுக்கு இரு மனைவிகள். பெரியம்மாவுக்கு குழந்தை இல்லாததால், பெரியம்மாவின் தங்கையை மனம் செய்தார். அக்காலகட்டத்தில் பணம் கொழித்திருக்கிறது. மாமனாருடைய நிலங்களை மீட்டிருக்கிறார். புதிதாக நிலங்கள் வாங்கியிருக்கிறார். சகலைகளுக்கு உதவியிருக்கிறார். அப்போது அவருடைய பரோபகாரம் வயல்சேரியிலும் அவனியாபுரத்திலும் பிரசித்தம். பலருக்கும் படிக்க உதவியிருக்கிறார். அம்மாவின் சகோதரி பிள்ளைகளுக்கு மணம் செய்வித்திருக்கிறார். இதில் அம்மாவின் முனைப்பும் அதிகம். அப்போதெல்லாம் வீட்டில் உலை கொதித்தபடியே இருக்கும். சோற்றுச் சட்டி கழுவிக் கவிழ்த்தப் பட்டதேயில்லை. வெவ்வேரளவான பானைகளில் சுடுசோறோ பழையதோ இல்லாமல் போகாது.

அப்பா செல்வத்தின் வனப்பையும் வறுமையின் கோரத்தையும் எங்களுக்குக் காட்டினார். மூத்த அக்காவின் பூப்புனித நீராட்டு விழா ஒரு கல்யாணத்தைப் போல பெரும் செலவில் நடத்தப் பட்டது. கடைசித் தம்பியின் பிறந்த நாளன்று, 31 வருடங்களுக்கு முன், தொழில் சகாக்களின் பரிசுகளாக அவனுக்கு ரெடிமேட் ஆடைகள் குவிந்தது நினைவில் உள்ளது. இன்னொருபுறம் 90களில் அன்றாட உணவுக்கே பெரும் சிரமம். நான் பத்தாவது படித்த காலத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் உணவு இருக்கும் என்பது நிச்சயமில்லை. அப்பா இரவு வீட்டிற்கு வந்த பிறகே சாப்பாடு. ஆனாலும் எக்காலத்திலும் எந்தச் சூழலிலும் மனதை விட்டவரல்ல. தனக்கு முன்னைப் போல பணமீட்டித் தராத தொழிலையே தினந்தோறும் ஒரு தவம் போலச் செய்தார். பட்டதாரி மூத்த பிள்ளைகளின் பொறுப்பின்மையையும் சகித்தவாறே அதைச் செய்தார். ஒருபோதும் மூத்த பிள்ளைகளை வேலைக்குச் செல்லக் கடிந்ததில்லை. என்னால் முடிந்த அளவு நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற தோரணையிலேயே இருந்தார். அந்தக் காலகட்டத்தில் செல்வம் அக்காவே ஒரு தாயைப் போல எங்களைப் பராமரித்தார். அவர் மணமாகிச் சென்ற 1998 வரையிலும் நான் எனது துணிகளைக் கூட துவைத்ததில்லை.இறப்பதற்கு கொஞ்ச காலம் முன்பு வரையிலும் கூட சம்பாதிக்க முடியும் என்று நம்பினார். ஆனால் 90கள் 70 கள் அல்ல என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆட்ட விதிகள் வேகமாக மாறிக்கொண்டிருந்ததை அவர் உணர மறுத்தார். அல்லது தன் வழியே சிறந்தது என்று நம்பியிருக்கலாம்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவின் பிரிவு அவரைப் பாதித்தது. அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை என்றபோதும். 1989 என்று நினைக்கிறேன். அம்மா எங்களைத் தனியே விட்டுச் சென்றார். மனைவியற்று 6 பிள்ளைகளுடன், வயது வந்த இரண்டு பெண்களோடு, அப்பா தனியே நின்றார். அதிலிருந்து அம்மா இறந்த 2007 வரைக்கும் பிரிவு பற்றிய உளைச்சல் எதுமற்றவராகவே காட்டிகொண்டார். ஒருவேளை அம்மாவின் இறப்பு அவருக்கு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கக் கூடும். அதன் பிறகே அவனியாபுரத்தில் தனது சொந்த வீட்டில் கால் வைத்தார்.

தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தனியே வாழ்ந்து ஒரே ஒரு தங்கையை மணம் செய்வித்திருக்கிறார். இளம் வயதில் பேபி என்ற பெண்ணைக் காதல் மணம் செய்திருக்கிறார். பதிவுத் திருமணமா என்று தெரியவில்லை. அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. பிரிவின் காரணம் தெரியவில்லை. வாழ்க்கை முழுவதுமே பெண்களுடனான அவரது உறவு நீடிக்காத வகையில் அவர் சபிக்கப் பட்டிருந்தார். பிரிவுகளை உள்ளூர ரசித்தாரா என்று தெரியவில்லை.

புத்தகம் படிக்கும் பழக்கமோ சினிமா, இசை போன்றவற்றைச் சிலாகித்துப் பார்க்கும் வழக்கமோ இருந்ததில்லை. நீண்ட காலத் தோழர் என்று யாருமில்லை. தனியான பொழுதுகளில் என்ன செய்திருப்பார் என்று யோசிக்கிறேன். இளம் வயதில் அவர் நாடகங்களில் நடித்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

யாருடைய வழிகாட்டுதலோ குறைந்தபட்சக் கட்டுப்பாடுகளோ ஏதுமின்றியே அவர் வளர்ந்தார். எங்களையும் அப்படியே வளர்த்தார். பாவனை மிகுந்த தாயின் பாசமோ தந்தையின் கண்காணிப்போ இல்லாமலே நாங்கள் வளர்ந்தோம். சக நண்பர்களின் வீட்டில் அவர்களது பெற்றோர் அவர்கள் மீது காட்டும் கரிசனமும் சுமத்தும் கட்டுப்பாடுகளும் எனக்கு மிக அந்நியமாகத் தோன்றும். நானோ ஒரு காட்டுச் செடியைப் போல வளர்ந்தேன்.
அவர் வளர்ந்த விதம் அவரை எப்போதும் தனியனாக உணரச் செய்தது போலும். நானும் சில சமயம் நண்பர்களோடு உரையாடிக் கொண்டிருக்கையிலும் தனியனாகி விடுகிறேன். சட்டென்று தொடர்பறுந்தது போல.

சில வருடங்களுக்கு முன் அப்பாவின் நில விவகாரம் தொடர்பாக வயல்சேரி சென்றபோது அப்பாவின் இன்னொரு பரிமாணத்தை அங்கிருந்த பெரியவர்கள் சொல்லக் கேட்டேன். அவரது இளம் வயது அந்தரங்க வாழ்க்கையின் சில கீற்றுகள் தெறித்துப் பறந்தன. கிராமத்துச் சனங்கள் சம்பவங்களை மென்று மென்று சீரணிக்கத் தோதாக்கி விடுகிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூர்த்தி மொபைலில் கூப்பிட்டபோது அப்பா இறந்து விட்டாரென்று மனம் சொல்லியது. அனால் அவருக்கு சர்க்கரை குறைந்து உடல் மயங்கியதே பிரச்சினை. பிறகு சர்க்கரை தண்ணீர் கொடுக்கச் சொல்லி எல்லாம் சரியாகி விட்டாலும் மனம் அமைதியற்றுக் கிடந்தது. அவரது இறப்பை மனம் வேண்டியதா? பிறகு பத்தரை மணியளவில் மீண்டும் பிரச்சினையாகி மூர்த்தி மருத்துவமனை செல்ல ஆட்டோ கூப்பிட முனைய அவர் வேண்டாம் என்றிருக்கிறார். 'இது வேற மாதிரி இருக்கு' என்றவர் கழிப்பறை கூட்டிச் சென்று வந்த பிறகு இறந்துபோனார்.

சென்னையிலிருந்து விரட்டிக்கொண்டு இரவு 7 மணிபோல அவனியாபுரம் சேர்ந்தபோது, தான் வாங்கிக் கட்டிய வீட்டின் முன்னறையில் குளிர் பெட்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். பெற்றோரின் அண்மையின்றி வளர்ந்து சம்பாதித்து, ஒரு தங்கையை மனம் செய்வித்து, செல்வமீட்டி, காதல் புரிந்து, பிள்ளைகள் பெற்று, மனைவியைப் பிரிந்து, ஒரு கொந்தளிப்பான வாழ்கையைத் தனியே எதிர்கொண்ட மனிதனின் உடல். எந்த உணர்வும் அற்றதாக நான் அக்கணத்தை உணர்கிறேன். அமைதி கொள்ளுங்கள் அப்பா, இந்த அபத்த வெளியில் நீங்கள் செய்யக்கூடியது இனி ஏதுமில்லை.       
 

Wednesday, January 9, 2013

திறக்க அஞ்சி நீ பூட்டி வைத்திருக்கும்
உனது இருண்ட வீட்டின் மூலை அறையினுள்
கணத்துப் பொழிகிறதென் மேகம்.