நாங்கள் தங்க மீன்கள் வைத்திருந்தோம்.
பெரிய சாளரத்தை மூடிக்கொண்டிருக்கும்
கனமான திரைச்சீலைக்கு அருகிலுள்ள
ஒரு கிண்ணத்தில்
அவை சுற்றிச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தன.
எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருந்த,
நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்க விரும்பிய,
எனது தாய் கூறினாள், " மகிழ்ச்சியாய் இரு ஹென்றி!".
அவள் சொன்னது சரிதான்.
மகிழ்ச்சியாய் இருப்பது நல்லதுதான்
உங்களால் முடிந்தால்.
ஆனால்,
தனது 6 அடி 2 அங்குல உடலில்
கொதித்துக் கொண்டிருந்த எனது தந்தை
அவளையும் என்னையும்
ஒரு வாரத்தில் பல முறை அடித்துகொண்டிருந்தார்.
ஏனென்றால்,
அவரை உள்ளிருந்து தாக்குவது எது என்று
அவரால் புரிந்து கொள்ளமுடியவில்லை.
மகிழ்ச்சியாக இருக்க விரும்பும்,
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தாக்கப்படும்,
எனது தாய், முட்டாள் பெண்,
என்னிடம் மகிழ்ச்சியாயிருக்கச் சொல்கிறாள்:
"புன்னகை செய், ஹென்றி! ஏன் நீ எப்போதும் புன்னகைக்கக் கூடாது?"
பிறகு அவள் புன்னகைப்பாள்,
எப்படியென்று எனக்குக் காட்ட.
அதுவே நான் பார்த்ததிலேயே
மிகவும் துயரமான புன்னகை.
ஒருநாள் தங்கமீன்கள் இறந்து போயின.
மொத்த ஐந்தும்.
தங்கள் பக்கவாட்டில் அவை தண்ணீரில் மிதந்தன
கண்களைத் திறந்தவாறே.
அப்புறம் எனது தந்தை வீடு சேர்ந்த பின்
அவற்றை
சமயலறைத் தரையில் பூனைக்கு வீசினார்.
நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம்
எனது தாய் புன்னகைத்துக் கொண்டிருக்கையில்.
சார்லஸ் பூகாவ்ஸ்கி