சர்வதேசச் சரக்கு
இறக்குமதி வளாகத்திலிருந்து பாஸ்கரின் உடல் வெளியே வந்த போது நான் பயந்தது போல இல்லை.
நன்றாக பாக் செய்யப் பட்டிருந்த ஒரு பார்சல் பெட்டி. அவ்வளவு தான். தனது குடும்பத்தாலும்
நண்பர்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட, ஒரு முப்பத்து மூன்று வயதுக்காரனின் உடல் அதிலிருக்கிறது
என்றால் யாருக்கும் நம்பக் கடினமாகவே இருக்கும். மீனம்பாக்கத்திலிருந்து காஞ்சீபுரம்,
செய்யாறு வரையில் இரண்டு மணி நேரம் தாக்குப்பிடிக்க வேண்டும். அபு கதறாமல். மாறாக அபு
மிகச் சாதாரணமாகவே இருந்தான். இறப்புக்கும் உடலை வாங்குவதற்கும் இடையிலான நாட்களில்
அவன் நிறைய அழுதிருந்தான்.
பத்து நாட்களுக்கு
முன், தொழில் விசயமாக, ஒரு ஞாயிறு மதியம் அபுவைக் கூப்பிட்ட போது குரல் உடைந்து கதறினான்.
பாஸ்கர் ஆஸ்திரேலியாவில் கார் விபத்துக்குள்ளாகி ’க்ரிடிக்கலாக’ இருக்கிறான் என்றான்.
கூடவே பயணித்த அம்மாவிற்கும் தம்பி மனைவிக்கும் சேர்ந்து அடிபட்டிருக்கிறது. அதற்குமேல்
பேச முடியவில்லை. ஒரு சில நாட்களுக்கு முன்னால் தான் பாஸ்கர் தனக்கு வாங்கி அனுப்பவிருக்கிற
லாப்டாப் பற்றிய லின்க்கை என்னைப் பார்க்கச் சொல்லியிருந்தான். அன்று மாலையே இறப்பு
உறுதி செய்யப்பட்டது.
ஒரிரு நாட்களில்,
ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது என்பது தெளிவில்லாமலிருக்க, அபுவே அங்கு செல்ல முடிவெடுத்தான்.
பழைய பாஸ்போர்ட்டில் உள்ள இனிசியல் பிரச்சினை தீர்ப்பதற்காக அதாரம் வேண்டி அவனது வங்கி
சென்று மேலாளரிடம் (ஆப்பரேஷன்ஸ்) கேட்க, அவர் வள்ளென்று விழுந்தார். அபு விசயத்தைச்
சொல்லி வேண்டையிலேயே கண்ணில் நீர் முட்டியது. வேறு ஆதாரங்களைக் காட்டியும், ’போதாது
கெஜட்டில் மாற்றிக் கொண்டு வா’ என்றார். இது வேலைக்காகாது என்று முதன்மை மேலாளரிடம்
போனோம். அவரும் அதையே சொல்ல ஆரம்பிக்க, அபு உடைந்து, கண்ணீர் வழிய பாஸ்போர்ட்டின் அவசரத்
தேவை பற்றிய காரணம் சொன்னான். பாஸ்கரின் விபத்து பற்றிய ஆஸ்திரேலிய போலீஸ் செய்தியைப்
பார்த்த பின்பே மேலாளர் மனம் இரங்கினார். பிரச்சினை தட்கல் பாஸ்போர்ட் எடுக்கையிலும்
வந்தது. 'நான் கிறிஸ்த்தவனாக மாறி, ஜான் என்று பேர் இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை
வந்திருக்காது,' என்றான் அபு.
அடுத்த சில தினங்களில்
அம்மாவும் தம்பி மனைவியும் இந்தியா வந்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால், பிறகு
அபு அங்கு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. அவர்களை அழைத்துக்கொள்ள
சென்னை சர்வதேச வருகைப் பகுதியில் காத்திருக்கையில் அபு அமைதியாகவே இருந்தான். நேரம்
செல்லச் செல்ல மவுனமும் இறுக்கமும் ஊறி ஊறித் திரண்டு கொண்டிருந்தது. வருகைப் பகுதியின்
நீண்ட பாதையில் யார் யாரோ வர வர இறுக்கம் மேலும் கூடியது. பிறகு அது நடந்தது. அம்மா
உடைந்து சரிந்து, நண்பர் ஒருவர் தாங்கிப் பிடித்தவாறு கூட்டிவர, அழுதவாறு வந்தார்.
அவரது கண்கள் அபுவைத் தேடிக் கொண்டிருந்தன. அந்த ஒரு கணத்தைக் கடக்கவே இவ்வளவு நாளும்
அபு காத்திருந்தான். தம்பி மனைவி, தலைமுடி காற்றில் பறக்க, தனது தாயை நோக்கிக் கதறியவாறு
ஒடினார். அவர்கள் இருவருமே இப்போதுதான், பாஸ்கர் இறந்து ஐந்து நாள் கழித்து, தங்களது
குடும்பத்தைப் பார்க்கிறார்கள் என்பதே எனக்கு உறைத்தது.
நான் செய்யாறில்
இருந்த நாள் முழுதும், ஆட்கள் வர வர, அழுகையும் கதறலும் கூடியும் குறைந்தும் கேட்டுக்
கொண்டேயிருந்தது. பெரியவர் ஒருவரிடம் அம்மா, “எம் பக்கத்துலதான் இருந்தான். சுத்தி
மரங்க இருந்துச்சு, தண்ணி பக்கத்துல ஓடிக்கிட்டுருந்துச்சு” என்றார். பெரியம்மா ஒருவர்,
‘யே, சதிகார தெய்வமே, உனக்கு கண்ணில்லையா,” என்று கதற, மொத்த சனமும் உடைந்து கதறியது.
இரவு ஒவ்வொருவராய்க் கரையக் கரைய, இருள் சூழ்ந்து வீடு மவுனமானது.
செய்யாறிலிருந்து
சென்னை வரும் வழியில், கல் குவாரி ஒன்றில் உடைத்துச் சரிக்கப்பட்ட கற்கள் அருகிலிருக்கும்
குன்றைப் பார்த்தவாறு கிடக்கின்றன.
அபுவின் நண்பர்
ப்ரசன்னா ஒரு நாள், கூகுள் மேப்சில், விபத்து நடந்த, விக்டோரியாவிலிருந்து ஹால் என்ற
இடத்துக்குப் போகும் சாலையைக் காண்பித்தார். அவர் திரையில் இழுக்க இழுக்க நீண்டு வரும்
சாலையைக் கூர்ந்து கவனித்தோம். எங்கேயாவது சாலையோரம் மரத்தில் மோதி நிற்கும் காரைக்
கண்டுவிடமுடியும் என்பதுபோல்.
சனி இரவு, இதிலிருந்து
சட்டென்று வெட்டிக்கொள்ள வேண்டி நுழைந்த பல்லாவரம் டஞ்சன் பாரில் பியர் நன்கு குளிர்ந்திருந்தது.
நகரத்தில் தனித்து விடப்பட்டவர்களின் இளைப்பாறுதல் நன்கு குளிரூட்டப்பட்ட பியரிலேயே
இருக்கிறது. எவ்வளவு குளிரூட்டப்பட்டிருக்கிறதோ அவ்வளவு இளைப்பாறுதல்.
ஒரு புதன் கிழமை
காலை வந்த பாஸ்கரின் உடல் எல்லா சம்பிரதாயங்களும் முடிந்து மாலை 4 மணிக்கு ஆம்புலன்சில்
ஏற்றப்பட்டபோது நான் சற்று ஆசுவாசமடைந்தேன். தனது இருப்பினால் எங்களை உறுத்தாத ஒரு சாதாரணப்
பெட்டியாகத்தான் அது இருந்தது. அங்கிருந்து செய்யாறு செல்லும் இரண்டு மணி நேரமும்,
தொடர்ந்து மொபைலில் பேசிக்கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு தரம்,
கிட்டத்தட்ட நாலைந்து பேருக்கு, வண்டி எங்கே வந்து கொண்டிருக்கிறது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் தெருவில்
நுழைந்ததும் வீட்டிலிருந்து பெருஞ்சத்தம் எழுந்தது. இந்த ஒரு தருணத்திற்காகவே காலையிலிருந்து
பலரும் காத்திருந்தனர். பெட்டியை நானும் சிலரும் சேர்ந்து வீட்டினுள் வைக்க மீண்டும்
பெண்கள் பெருங்குரலெடுத்துக் கதறினர். பெட்டியின் கார்ட்போர்டு
பகுதியை முதலில் பிரித்து எடுக்க உள்ளே ஒரு அரக்கு நிற சவப்பெட்டி இருந்தது. திருப்புளியும்
உபகரணங்களும் கொண்டு திறக்க, ஒருவிதமான ரசாயன வாடையோடு, வெள்ளைத் துணியில் நன்கு சுற்றப்பட்டு,
முகம் மட்டும் தெரியுமாறு பாஸ்கரின் உடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது.
எல்லாரும் அபுவிடம்
ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்கிறார்கள். நானும் கூட ஏதாவது சொல்லத்தான் வேண்டும்.
சரி.
”அபுபக்கர் சித்திக், சதிகார தெய்வங்களிடம் கவனமாயிரு.”